ஆப்கானிஸ்தான் நடாளுமன்றம் மீது தாக்குதல்: பிரதமர் மோடி, சோனியா கண்டனம்..
டெல்லி : ஆப்கானிஸ்தானில் நேற்று பாராளுமன்றத்தை குறி வைத்து தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான மற்றும் கோழைத்தனமான செயலாகும். ஜனநாயகத்தில் இதுபோன்ற தாக்குதலுக்கு இடமே கிடையாது' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் தகவலில், ‘தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நேரத்தில், நாம் ஆப்கானிஸ்தான் மக்களின் தோளோடு தோளாக நிற்போம்' என்று கூறியுள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ‘‘உலகம் முழுவதும் ஜனநாயகம் வலுப்பெற்று வரும் நிலையில் தீவிரவாதிகளின் இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை'' என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
ராகுல்காந்தி தனது கண்டனச் செய்தியில், தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
இதனிடையே தாக்குதலைத் தொடர்ந்து, காபூல் நகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் அமர் சின்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.