அது ஒரு இருண்ட காலம்.. வானொலி நிகழ்ச்சியில் காங்கிரசை வம்புக்கு இழுத்த மோடி
டெல்லி: இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை என்பது இந்திய வரலாற்றின் இருண்ட காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் வானொலி உரையில் இன்று தெரிவித்தார்.
19வது வானொலி உரையை இன்றையதினம் ஆற்றிய மோடி 1975ம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் சர்வாதிகார முறையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினார். இதே மாதத்தில்தான் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது என்பதால் இன்றைய மான் கி பாத்தில் மோடி அதை நினைவு கூர்ந்தார்.
மோடி கூறியதாவது: 1975ம் ஆண்டு ஜூன் 25-26ம் தேதி இரவு நமது ஜனநாயகத்தின் கருப்பு இரவுகளாகும். ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களும், மாணவ இயக்க தலைவர்களும், காரணம் இன்றி சிறையில் தள்ளப்பட்டனர்.
ஜனநாயகம்தான், நமக்கு பலம். அந்த பலம் பலவீனப்படுத்தப்பட்டது. இருப்பினும், மக்கள் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்ததால் அது மீட்கப்பட்டது. எனது நாட்டு மக்கள் எப்போதுமே, ஜனநாயகத்திற்குதான் முக்கியத்துவம் தருவார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களின் குரல் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களால் வெளிப்படையாக பேச முடிகிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.