500 ரூபாய் கல்யாணம்.. மோடி நெகழ்ச்சி.. ரெட்டி மகளின் ரூ 500 கோடி கல்யாணம் குறித்துப் பேச மறந்தார்!
சூரத்தில் 500 ரூபாய்க்கு நடந்த திருமணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடியில் நடத்திய திருமணம் குறித்து அவர் பேசவில்லை.
டெல்லி: வெறும் டீ விருந்துடன் 500 ரூபாய்க்குள் சூரத்தில் ஒரு கல்யாணம் நடந்துள்ளதைக் கேள்விப்பட்டேன். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மக்கள் இதுபோன்ற தியாகங்களை செய்வதை நினைத்து பெருமை அடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வாரந்தோறும் ஆற்றி வரும் மன்கி பாத் உரையில் இன்று அவர் ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்தே முக்கியமாகப் பேசினார். தனது திட்டத்தால் மக்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் கர்நாடக மாநிலத்திலிருந்து எல்லப்பா வெலன்கர் என்பவரும், மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆசிஷ் பாரே என்பவரும் பேசிய ஆடியோ தொகுப்பையும் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்.
சூரத்தில் நடந்த 500 ரூபாய் கல்யாணம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, மறந்தும் கூட கர்நாடகத்தில் பாஜகவைச் சேர்ந்த ஜனார்த்தனன் ரெட்டி தனது மகளுக்கு 500 ரூபாய் கோடியில் திருமணம் செய்து வைத்தது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
பிரதமரின் பேச்சிலிருந்து...
ஜவான்கள்
கடந்த மாதம் நாம் தீபாவளியைக் கொண்டாடினோம். எல்லோரையும் போல நானும் கொண்டாடினேன். நமது ஜவான்களுடன் நான் கொண்டாடினேன். ஒருமுறைக்கு எனக்கு ஒரு ஜவான் எழுதியிருந்தார். தீபாவளி, ஹோலி எல்லாமே எங்களுக்கு ஒன்றுதான். எல்லா பண்டிகைகளின்போதும் நாங்கள் நாட்டைக் காக்கும் பணியில்தான் கவனமாக இருப்போம் என்று.
தலைவர்களுக்கு உத்தரவு
சில காலத்திற்கு முன்பு நான் ஜம்மு காஷ்மீரில் சில தலைவர்களைச் சந்தித்தேன். அஏவர்களிடம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், நகரங்களின் வளர்ச்சிக்காகவும், சிறார்களின் நலனுக்காகவும் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டேன். தற்போது இவர்கள் அந்த நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அது மகிழ்ச்சி தருகிறது.
50 நாட்கள் கழித்துப் பேசுவேன்
ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக நான் தொடர்ந்து மக்களிடம் விளக்கி வருகிறேன். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு தொடர்பாக விரிவாகப் பேசுமாறு என்னை சிலர் தொடர்ந்து நெருக்கி வருகின்றனர். நான் முன்பு சொன்ன அதே கருத்தையே திரும்பக் கூறுகிறேன். 50 நாட்கள் நான் அவகாசம் கேட்டுள்ளேன். அதன் பிறகு இதுகுறித்து விரிவாகப் பேசுவேன்.
கஷ்டம்தான்
நான் இந்த முடிவை எடுத்தபோது, இதன் சிரமங்கள் குறித்தும் நான் விளக்கிப் பேசினேன். பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். கடந்த 70 வருடமாக சந்தித்து வரும் பிரச்சினை இது. இதை சரி செய்வதில் சிரமம் இருக்கத்தான் செய்யும். ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிப்பது எளிதானதல்ல.
சூரத்தில் நடந்த 500 ரூபாய் திருமணம்
இன்று வங்கிகள் விடுமுறையே இல்லாமல் வேலை செய்து கொண்டுள்ளன. அரசாகம், தபால் நிலையங்கள் என அனைத்துமே கடுமையாக பாடுபட்டு வருகின்றன. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். சாமானிய மக்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்வு என்னை பெருமைப்படுத்துகிறது. சூரத்தில் 500 ரூபாய்க்குள் ஒரு திருமணம் நடந்ததை அறிந்தேன். வெறும் டீ விருந்துடன் அது முடிந்துள்ளது. மக்கள் இதுபோலத் தியாகங்கள் செய்வது என்னை நெகிழ வைக்கிறது.
முதுகெலும்பே விவசாயிகள்தான்
நமது நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். நமது பொருளாதாரத்தின் முக்கிய அச்சு அவர்கள். சிறு வியாபாரிகள் நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறார்கள். பொருளாதார சிரமத்திற்குமத்தியிலும், கஷ்டத்திற்கு மத்தியிலும் மக்கள் அதை சமாளிக்க முயலுகிறார்கள். நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகளின் நலனுக்காகவே இந்த மிகப் பெரிய பொருளாதார முடிவை நான் எடுத்தேன். பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துமே மக்களுக்காகத்தான்.
கார்டுகள் இருக்கக் கவலை ஏன்
சிறு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதை நான் உணர்கிறேன். அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தொழில்நுட்பம், மொபைல் ஆப்புகள், மொபைல் வங்கிகள், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றின் மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பணமில்லாத சமூக்ம்தான் நமது கனவாகும். அது உடனடியாக முழுமையாக வரும் என்று கூற முடியாது என்பதை நான் உணர்வேன். ஆனால் நாம் ஆரம்பித்து வைப்போம். அது நிச்சயம் ஒரு நாள் பலனைக் கொடுக்கும்.
பல வழிகள் உள்ளன
பணம் பெற கொடுக்க இன்று பல வழிகள் நமக்கு உள்ளன. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. பாதுகாப்பானதாக இருக்கிறது. தாள்களின் உபயோகத்தைக் குறைத்து விட்டு மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு நாம் மாறுவோம். நமது தொழிலாளர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும். தங்களது சம்பளத்தை இதில் போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கூலிக்கும் பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்ச கூலி உத்தரவாதச் சட்டத்தையும் நாம் திறம்பட அமலாக்க முடியும் என்றார் மோடி.