இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம் ஜிஎஸ்டி.. அறிமுக விழாவில் மோடி பெருமிதம்
இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம் ஜிஎஸ்டி என்று அறிமுக விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா தொடங்கியது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அறிமுக விழா தொடங்கியுள்ளது.
அறிமுக விழாவில் அருண் ஜேட்லி வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
வருங்காலத்தை தீர்மானிக்கும்
ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து இந்தியாவின் வருங்காலத்திற்கு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது. இன்று நள்ளிரவில் இந்தியாவின் வருங்காலத்தை நாம் தீர்மானிக்க உள்ளோம்.
120 கோடி மக்கள் சாட்சி
ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ உரித்தானது கிடையாது. ஜிஎஸ்டி அமலானதற்கு கூட்டு முயற்சியே காரணம். இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு 120 கோடி மக்களே சாட்சி.
கூட்டாட்சி தத்துவம்
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக ஜிஎஸ்டி விளங்குகிறது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக உருவாக்கினார். அதுபோல் பல்வேறு வரிகள் சேர்க்கப்பட்டு ஜிஎஸ்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.
குழப்பங்கள் தீரும்
ஜிஎஸ்டி வரி விதிப்பால் முதலீட்டாளர்களின் குழப்பங்கள் தீரும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஜிஎஸ்டி உதவும். ஊழல்களை ஒழிக்க ஜிஎஸ்டி உதவும். அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து வணிகர்கள் தப்பிக்க முடியும் என்று மோடி கூறினார்.