திறப்பு விழாவுக்கு முன்பே மோடி கோவிலுக்கு மூடு விழா
அகமதாபாத்: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மோடி கோவில் மூடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜகவினர் கோவில் கட்டினர். இந்த கோவிலில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி பிரமாண்டமாக திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இது குறித்து அறிந்த மோடி தனக்கு கோவில் கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்தார். இந்த செயலால் தான் கவலை அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மோடி வருத்தம் தெரிவித்ததையடுத்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலை துணியைப் போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கோவில் திறப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மோடியின் சிலையை செய்ய ரூ.1.65 லட்சம் செலவானது. அதை 4 ஆண்டுகளாக செய்துள்ளனர். ஒடிஷாவில் இருந்து கலைஞர்களை குஜராத்திற்கு வரவழைத்து மோடியின் சிலையை செய்துள்ளனர். மேலும் கோவிலை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.