ஏமனில் இருந்து 11 இந்தியர்களை மீட்டதற்கு நவாஸ் ஷரீபுக்கு நன்றி தெரிவித்த மோடி
டெல்லி: ஏமனில் சிக்கித் தவித்த 11 இந்தியர்களை மீட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டியுள்ளன. இந்நிலையில் ஏமனில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டு வந்துள்ளது. கராச்சி வந்த அவர்களை தனி விமானம் மூலம் நாங்களே இந்தியா அனுப்பி வைக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
I welcome our 11 citizens who've returned from Yemen with assistance from Pakistan. Thank you PM Nawaz Sharif for your humanitarian gesture.
— Narendra Modi (@narendramodi) April 8, 2015
பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டது. இதையடுத்து அந்த 11 பேரும் சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை டெல்லி வந்து சேர்ந்தனர்.
Service to humanity knows no borders. Glad we helped many countries in evacuation from Yemen.
— Narendra Modi (@narendramodi) April 8, 2015
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் உதவியுடன் ஏமனில் இருந்து மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ள 11 இந்திய குடிமக்களை நான் வரவேற்கிறேன். மனிதநேய செயலுக்காக பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதர்களுக்கு சேவை செய்வதற்கு எல்லை இல்லை. ஏமனில் இருந்து மக்களை மீட்க நாம் பல நாடுகளுக்கு உதவியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏமனில் இருந்து மக்களை மீட்க பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.