அப்ப இனி பலூச் மொழியிலும் மோடி ட்வீட் போடுவாரோ?
டெல்லி: பிரதமர் மோடி நாட்டில் உள்ள அத்தனை மொழிகளிலும் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்... ஏன் வெளிநாட்டு மொழிகளிலும் கூட அவ்வப்போது ட்வீட் போட்டு அசத்தி வருகிறார்... தற்போது பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப அனுமதித்திருப்பதால் அனேகமாக அந்த மொழியிலும் ட்வீட்டுகள் போட்டு அசத்துவார் என்றே தெரிகிறது.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசம். ஆப்கானிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில்தான் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகம் உள்ளது.
இந்த கத்வார் துறைமுகத்தை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டது பாகிஸ்தான். ஏற்கனவே வறுமையில் வாடும் பலுசிஸ்தானிய பழங்குடிகள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு தரவேண்டும் என கோரி வந்தனர். ஆனால் இதை தொடர்ந்து பாகிஸ்தான் நிராகரித்து ஒடுக்குமுறயை ஏவிவிட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பலுசிஸ்தான் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு பிரதமர் மோடி பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் பாகிஸ்தான் பிடியில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் பலுசிஸ்தானையும் மீட்போம் என பிரகடனம் செய்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிர அக்கறைகாட்டி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று பலூச் மொழியில் பலுசிஸ்தான் மக்களுக்கான வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பவும் ஆல் இந்தியா ரேடியோவுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய மொழிகளில் ஒன்றாக பலூச் நுழைந்து கொண்டிருக்கிறது.
அனேகமாக பிரதமர் மோடியும் பலூச் மொழியில் ட்வீட்டுகளைப் போடத் தொடங்கிவிடுவார்.. இந்தியாவின் மாநில மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் அவ்வப்போது ட்வீட் போடுபவர் பிரதமர் மோடி. இனி பாகிஸ்தானை மிரட்ட பலூச் மொழியில் ட்வீட் போடுவதையே ஆயுதமாக மோடி கையிலெடுக்கவும் கூடும் என்றே தெரிகிறது.