துபாய், அபுதாபிக்குப் போகும் நரேந்திர மோடி.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 16ம் தேதி துபாய்க்கும், அபுதாபிக்கும் விஜயம் செய்யவுள்ளார். அவரது பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகத் தலைவர்களுடன் அவர் சந்திக்கவிருப்பது பல்வேறு ஆர்வங்களைத் தூண்டியுள்ளது. இரு தரப்பு எண்ணெய் வர்த்தகம், தீவிரவாதத் தடுப்பு, முதலீடுகளை ஈர்ப்பது குறித்து முக்கியப் பேச்சுக்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
மேலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் கடந்த ஒரு வருடமாக சிக்கியிருக்கும் 39 இந்தியர்களை மீட்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பு குறித்தும் அமீரகத் தலைவர்களுடன் முக்கியமாக மோடி ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் அமீரகத்தின் உதவியையும் மோடி கோரவுள்ளார்.
எண்ணெய் வர்த்தகம்
மோடி பயணத்தின் முக்கிய அம்சமாக இரு தரப்பு எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து முதன்மையாக ஆலோசிக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு குறைந்துள்ளது. இந்த நிலையில் அந்த விஷயத்தில் அமீரகத்துடன் வர்த்தகத்தைப் பெருக்கும் வகையிலான பேச்சுக்களில் மோடி ஈடுபடலாம்.
வர்த்த ஒத்துழைப்பு
அடுத்து வர்த்தக ஒத்துழைப்பு. தற்போது அமெரிக்க முதலீடுகளிலேயே அதிக அளவில் கவனம் செலுத்துகிறது அமீரகம். தனது பயணத்தின்போது இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அமீரக தலைவர்களை கேட்டுக் கொள்வார், வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாத எதிர்ப்பு
தீவிரவாதம் இன்னொரு முக்கியப் பிரச்சினை. பிராந்தியப் பாதுகாப்பும் இன்னும் ஒரு முக்கிய அம்சம். இதுகுறித்தும் முக்கியமாக அமீரகத் தலைவர்களுடன் பேசவுள்ளார் மோடி.
39 இந்தியர்கள் மீட்பு
ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 39 இந்தியர்களை மீட்க முடியாமல் இந்தியா தவித்து வருகிறது. தனது நட்பு முஸ்லீம் நாடுகளுடன் இதுதொடர்பாக அது தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இருப்பினும் மீட்க முடியவில்லை.
ஈராக் தொடர்புகள்
இந்த விஷயத்தில் அமீரகத்தின் உதவியை அது பெரிய அளவில் கோரவுள்ளது. ஈராக்கில் உள்ள தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அமீரகத் தலைவர்கள் இதற்கு உதவ வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
இந்தியர்கள் தடுப்பு
இதுதவிர அமீரகம் வழியாக ஈராக், சிரியா செல்லும் இந்தியர்கள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உள்ள வழி குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
உளவுத் தகவல்களை அனுப்பி
இந்தியாவிலிருந்து அமீரகம் செல்லும் இந்தியர்களில் யார் சிரியா அல்லது ஈராக்குக்குத் தப்பிச் செல்கிறார்கள் என்பது குறித்த உளவுத் தகவல்களை அமீரகத்திடம் அனுப்பி, அவர்கள் மூலம் அந்த இந்தியர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் இந்தியா ஈடுபடவுள்ளது.
துபாயில் பிரமாண்ட சந்திப்பு
தனது இரு நாள் பயணத்தின்போது துபாய், அபுதாபிக்கு மோடி செல்கிறார். முதல் நிகழ்ச்சி துபாயில் நடைபெறும். அதில் இந்தியர்களைச் சந்திக்கிறார் மோடி. பின்னர் இந்தியத் தொழிலாளர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபி இளவரசருடன் சந்திப்பு
அடுத்து அபுதாபியில் இளவரசர் ஷேக் முகம்மது பின் சயத் அல் நஹ்யானைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. மேலும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமையும் அவர் சந்திக்கவுள்ளார்.