மீனவர் பிரச்சினையில் மனிதாபிமானம் தேவை... இலங்கை பிரதமர் ரணிலிடம் மோடி வலியுறுத்தல்
டெல்லி : மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்பையில் அணுக வேண்டும் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் வலியுறுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இன்று (செவ்வாய்கிழமை) காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இலங்கை, இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம்.
மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
ஏனெனில், இது மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினை. அதேவேளையில், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தயாராகும்படி ஊக்குவித்து வருவதாகவும் ரணிலிடம் கூறினேன்" என்றார் மோடி.