500, 1000.. மக்களே என்ன நினைக்கிறீங்க.. கருத்து கேட்கிறார் மோடி
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை தெரிவிக்க மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார்.
கடந்த 9ம் தேதியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி இரவு அறிவித்தார். இதன் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்றும், கள்ள நோட்டுக்கள் களையப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கறுப்புப் பணம் ஒழிந்ததோ இல்லையோ மக்கள் அன்றாட வாழ்க்கையே கேள்விக் குறியானது.
மேலும், அன்றாடம் வங்கிகள், அஞ்சலகங்கள், ஏடிஎம் மையங்களின் வாசல் முன்பு பொதுமக்கள் பணத்தை மாற்ற காத்திருக்கும் நிலை உருவானது. தங்களது பணத்தை மாற்றுவதற்கு வரிசை நின்றவர்கள் சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற ஒரு சாதாரண சூழல் ஏற்படுத்திய மோடி அரசை எதிர்க்கட்சிகள் கண்டித்தன.
குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணமுல் காங்கிரஸ் என பல முக்கிய கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கடும் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக வாயே திறக்கவில்லை.
I want your first-hand view on the decision taken regarding currency notes. Take part in the survey on the NM App. https://t.co/TYuxNNJfIf pic.twitter.com/mWv2frGn3R
— Narendra Modi (@narendramodi) November 22, 2016
மாறாக, இன்று ஒரு புதிய அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 500, மற்றும்1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய மொபைல் ஆப்பை கிளிக் செய்து அதன் மூலம் பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கறுப்புப் பணம் தொடர்பான சில கேள்விகளும் அதில் கேட்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் பதில் அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.