காங்கிரஸில் 9 பிரதமர் வேட்பாளர்கள் ஓகே.. பாஜகவில் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?
சென்னை: காங்கிரஸில் 9 பிரதமர் வேட்பாளர்கள் இருப்பதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், வலுக்கும் மோடி எதிர்ப்புக்கு என்ன செய்யப் போகிறது பாஜக என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
கடந்த 2014 -ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன். டீக்கடை நடத்தியவர், ஏழைத்தாயின் மகன், வளர்ச்சியின் நாயகன் என்றெல்லாம் சமூக வலைதளங்களிலும் பொது தளங்களிலும் பலத்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்களுக்கு இருந்த வெறுப்பும் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஊழல்களும் மக்களுக்கு பாஜக மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. இதை சரியாக கணித்த பாஜகவும் மோடியை ஒரு கடவுளின் அவதாரமாகவே சித்தரித்தனர்.
அதற்கேற்ப மோடியும் செல்லுமிடங்களில் எல்லாம் 56 இன்ச் மார்பளவு கொண்ட தன்னால் பாகிஸ்தான், இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க முடியும் என்றெல்லாம் பேசினார். இப்படியாக ஆர் எஸ் எஸ் எஸ் - ன் முழு ஆதரவோடு பிரதமர் வேட்பாளராக பாஜகவில் தேர்தல் களம் கண்டவர் பிரச்சார யுக்திக்கு கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தி கட்சியில் யார் யார் தனக்கு எதிர்காலத்தில் பிரச்சனையாக இருப்பார்கள் என்பதை சரியாக கணித்து அவர்களுக்கு எதிராக காய் நகர்த்த ஆரம்பித்தார். விளைவு முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, யஸ்வந்த் சின்ஹா போன்ற மூத்த தலைவர்கள் பாஜகவில் ஓரம்கட்டப் பட்டனர்.
பாஜகவின் அத்தனை அதிகாரமும் இப்படியாக ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்த சூழலில் மீண்டும் தேர்தலை சந்திக்கவுள்ளது பாஜக. கடந்த தேர்தலை போல இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை என்பத பாஜகவினரே ஒப்புக் கொண்டுள்ளதோடு மோடியை மாற்றிவிட்டு வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற தொடங்கியுள்ளது.
கட்கரி அடுத்த பிரதமர்?
தற்போதைய மத்திய அமைச்சரவையில் வலுவாக உள்ள நிதின் கட்கரியை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக ஆட்சியின் 3வது ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. பாஜகவின் அசைவுகளை தீர்மானிக்கும் ஆர் எஸ் எஸ் எஸ் -ம் மோடியை மாற்றிவிட்டு வேறு வேட்பாளரை அறிவித்து விடலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் கூறும் இந்த தருணத்தில் பாஜகவின் நீண்ட நாள் தோழனான சிவசேனா மோடியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறது.
சிவசேனா விலகவில்லை
சிவசேனா பாஜகவின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தாலும் கூட்டணியில் இருந்து இன்னும் விலகவில்லை. இந்த நிலையில் மோடிதான் அடுத்த தேர்தலிலும் பிரதமர் வேட்பாளர் என்றால் நிச்சயமாக நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறிவிட்டது. அதோடு உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட வேண்டும் என்பது கட்சியினர் ஒரு பிரிவினரின் கோரிக்கை. அதற்கேற்றார் போல உ. பி முதல்வராக்கப் பட்ட யோகியின் செயல்பாடுகளும் பிரமாண்டமாக இருக்கிறது என்று அவருக்கான பிரமோசன் வேலைகளும் அதி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டன. ஆனாலும் அவர் தனது செயல்பாடுகள் மூலம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
நிதிஷ் பிரதமர் வேட்பாளர்தான்
கடந்த மக்களைவை தேர்தலின்போதே மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தான் கூட்டணியில் இருக்கமாட்டேன் என்று கூறி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறினார். இப்போது அவர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், அவருக்கும் தான் பிரதமர் வேட்பாளர்தான் என்ற கனவு உண்டு. ஒருவேளை பாஜக தேர்தலில் போதிய அளவுக்கு இடங்களை வெல்லாத பட்சத்தில் நிதிஷ்குமார் பல தளங்களில் தான் பிரதமராவதற்கு முயற்சிக்கலாம் என்பதே தற்போதைய நிலை. இப்படியாக பாஜகவுக்கு உள்ளேயே 3 பிரதமர் வேட்பாளர்கள் தற்போதே போட்டியிட்டு வருகின்றனர். இதில் ஆர் எஸ் எஸ் சின் தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் நீண்ட நாட்களாக பனிப் போர் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் எஸ் மீண்டும் மோடியை பிரதமர் வேட்பாளாராக நிறுத்துமா எனபது சந்தேகமே.
இதையெல்லாம் சமாளிப்பாரா மோடி
பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி மோடிக்கு டஃப் பைட் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப் படும் நிலையில் மோடிக்கு மீண்டும் பாஜகவில் பிரதமர் வேட்பாளாராக வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அதோடு பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி எஸ் டி, ஆதார் அலைக்கழிப்பு, வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஆகியவற்றால் மோடி மீது இருக்கும் மக்களின் வெறுப்புணர்வும் ஒரு காரணமாக பிரதமர் வேட்பாளர் தேர்வில் இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இதையெல்லாம் சமாளிப்பாரா மோடி.