கருப்பு பணத்தை வெள்ளையாக்க மோடிஜியின் 'ஃபேர் அன் லவ்லி' திட்டம் : ராகுல் கிண்டல்
டெல்லி: கருப்பு பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கருப்பு பணத்தை வெள்ளையாக்க மோடி அரசு, ஃபேர் அன் லவ்லி திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அவர் கிண்டலடித்துள்ளார்.
வரும் 2016-17 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்நாட்டில் இதுவரை கணக்கில் காட்டப்படாமல் உள்ள கருப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவித்து அதை வெள்ளையாக்குவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி மத்திய அரசு மீது சராமரி புகார்களை அடுக்கினார்.
விலைவாசி உயர்வு
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக நரேந்திர மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். மோடி ஆட்சிக்கு வந்த பின் பருப்பு விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
ஃபேர் அன்ட் லவ்லி
ஃபேர் அன்ட் லவ்லி கிரீம் போல கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அருமையான திட்டத்தை தொடங்கியுள்ளனர் என்று கிண்டலடித்த அவர், தற்போது கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பை பெருக்குவோம் என்று மோடி கூறியது இன்னும் நடக்கவில்லை என்றும் ராகுல் தெரிவித்தார். மேலும் கச்சா எண்ணெய் விலை 35 டாலரான பிறகும் மக்களுக்கு பயன்போய் சேரவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
நூறு நாள் வேலை உறுதி திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மோசமான திட்டம் என்றார் மோடி. தோல்வியடைந்த திட்டம், நாட்டையே அழித்துவிட்டது, ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக நான் அந்த திட்டத்தை நீக்க மாட்டேன் என்றார்.
நிதி ஒதுக்கீடு
அதேசமயம், அருண் ஜெட்லியோ, அந்த திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்று என்னிடம் கூறினார். அப்போது, இதை ஏன் உங்கள் பாசிடம் (மோடி) இதை சொல்லவில்லை? என்று நான் கூறினேன். தற்போது அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கியபோது, நான் கண்களை மூடிக்கொண்டு, இது சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் என்று நினைத்துக்கொண்டேன்.
சராமரி தாக்கு
நாட்டிற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத கன்யா குமாரை இந்த அரசு இன்னும் சிறையில் வைத்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட ரோகித் வெமுலாவின் தாயாரை சந்தித்து மோடி ஆறுதல் கூறவில்லை என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
லோக்சபாவில் சிரிப்பலை
ராகுல்காந்தி இன்று பேசும் போது மத்திய அரசை சில நேரங்களில் சாடியும், கிண்டலடித்தும் பேசினார், அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிரித்து ராகுலின் பேச்சை ஆமோதித்தனர்.