சச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை
அலகாபாத்: தன்னை வெற்றி பெற வைப்பதற்காக சச்சின், கங்குலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என உறுதி படத் தெரிவித்துள்ளார் பல்புர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகமது கைப்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைப் உத்தரபிரதேச மாநிலம் புல்புர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். கைப் தேர்தலில் போட்டியிடும் தகவல் அறிந்து மூத்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல்டிராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவக், ஹர்பஜன்சிங் ஆகியோர் போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். எனவே அவர்கள் நிச்சயமாக தனக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் கைப்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கைப் கூறியதாவது :-
உத்திரப்பிரதேச வளர்ச்சி....
நான் கிரிக்கெட் போட்டிக்காக பயணம் செய்யும்போது மராட்டியம் அல்லது தென் மாநிலங்களில் பார்த்த வளர்ச்சி பணிகள், உத்தரபிரதேசத்தில் இல்லை. குறிப்பாக அலகாபாத்தில் வளர்ச்சி பணிகளோ, கூடுதலான விளையாட்டு கட்டமைப்பு வசதிகளோ எதுவும் இல்லை.
எனது சொந்த மாநிலத்துக்கு...
நான் எனது சொந்த மாநிலத்துக்கு, குறிப்பாக நான் பிறந்த அலகாபாத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
வாழ்த்து...
மூத்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல்டிராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவக், ஹர்பஜன்சிங் ஆகியோர் எனக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் பிரச்சாரம்...
அவர்கள் எனது தேர்தல் பிரசாரத்திற்கு வசதியான நேரத்தில் உதவுவதாக என்னிடம் உறுதி அளித்துள்ளனர்.
அரசியலிலும் ஸ்கோரை உயர்த்துவேன்...
நான் கிரிக்கெட்டில் பவுண்டரியோ, சிக்சரோ விளாசியதில்லை என்றாலும் விரைவான ஒரு ரன், 2 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்துவேன். ஆனால் அரசியலில் அதைவிட சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.