சூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்ல எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும்.. கொல்கத்தா போலீஸ் அதிரடி
சூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்லாமல் எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் கூறியுள்ளது.
கொல்கத்தா: சூதாட்ட புகாரில் ஷமியை மட்டுமல்லாமல் எல்லா வீரர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் கூறியுள்ளது. இதற்காக பிசிசிஐ அமைப்பிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது.
ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
ஷமி சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஷமி மீது கொல்கத்தா போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
துபாய்
ஷமி துபாயில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹசின் ஜகான் கூறினார். முகமது பாய் என்ற நபரை துபாயில் சந்தித்து மேட்ச் பிக்சிங் செய்தார் என்று கூறினார். இது குறித்து கொல்கத்தா போலீஸ் பிசிசிஐ அமைப்பிடம் விளக்கம் கேட்டு இருந்தது.
உண்மையில் இருந்தார்
இதுகுறித்து பிசிசிஐ கொல்கத்தா போலீசுக்கு தகவல் அனுப்பி உள்ளது. அதில் ''ஷமி துபாய் சென்றது உண்மைதான். பிப்ரவரி 17,18 தேதிகளில், தென்னாப்பிரிக்க மேட்ச் முடித்துவிட்டு அவர் அங்கேதான் சென்றார்.'' என்றுள்ளது. இதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளது.
ஒப்புக்கொண்டார்
இந்த புகாரை ஷமியின் தோழியும், பாகிஸ்தானை சேர்ந்தவருமான அலீஷ்பா ஒப்புக்கொண்டார். பிப்ரவரி 17, 18 தேதிகளில் தானும் அங்கேதான் இருந்தேன் என்றுள்ளார். ஆனால் ஷமியை பார்க்க அங்கே செல்லவில்லை என்றுள்ளார். ''நான் என் நண்பர்களை பார்க்க அங்கே சென்றேன். ஷமி அங்கே வந்தது எனக்கு தெரியாது. கடைசியாக சில நிமிடம் மட்டும் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்'' என்றுள்ளார்.
எல்லா வீரர்களின் விவரம்
ஆனால் கொல்கத்தா போலீஸ் இந்த தகவல் மூலம் திருப்தி அடையவில்லை. எல்லா வீரர்களும் தென்னாப்பிரிக்க போட்டி முடிந்த பின் எங்கே சென்றார்கள் என்ற விவரத்தை கேட்டுள்ளனர். கோஹ்லி தொடங்கி டோணி வரை எல்லோருடைய விவரமும் வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது. மற்ற வீரர்கள் யாராவது துபாய் சென்றார்களா என்று விசாரிக்கவே இந்த விவரத்தை கேட்டுள்ளது.