வெளி நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களே... சொல்கிறார் மோகன் பாகவத் !
மும்பை: இந்தியாவின் குணம் பன்முகத்தன்மை என்றும், அதேநேரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை ஹிந்துக்கள் என்றே அந்நாட்டினர் அழைக்கின்றனர் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் மாவட்டத்தில் மகர சங்கராந்தியையொட்டி நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான். நாட்டிற்குள் பன்முகத்தன்மை நிலவினாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவைத் தவிர, உலகில் வேறெந்த நாட்டிலும் உலக மக்கள் அனைவரையும் தங்கள் சொந்தம்போல் கருதுவோர் இல்லை. உலகப் பிரச்சினைகள் அனைத்துக்கும் இந்தியாவால் தீர்வு சொல்ல முடியும்.வனங்கள், சமவெளிகள், விவசாயம் ஆகிய அனைத்திலும் இந்தியாவின் கலாசாரம் வேர் கொண்டுள்ளது.
நமது நாட்டில், அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இணைந்து வாழ்வதற்கு ஒத்த கருத்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. இந்தியாவில் உள்ள மக்கள், கடவுளை பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றனர். எல்லா வடிவங்களிலும் இறைவனை அங்கீகரிப்பவரே ஹிந்து. மற்றவர்களின் கருத்துகளுக்கும் நாம் மரியாதை அளித்து வருகிறோம். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.