ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி ஆக்க வேண்டும்.. சிவசேனா விருப்பம்
நாட்டின் மிக முக்கியமான குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெயரை பரிந்துரை செய்துள்ளார் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்
மும்பை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவர் ஆக்கவேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்து பின்னர் குடியரசு தலைவர் ஆனார். இதனால் அவரது பதவிக் காலம் முடிந்தவுடன் பாஜக அரசுக்கு சாதகமான ஒருவரையே குடியரசு தலைவராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முதல் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பெயர் வரை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்து தேசம் என்ற கனவானது நிறைவேற வேண்டும் என்றால் மோகன் பகவத் இந்தியாவின் ஜனாதிபதியாக வேண்டும். இந்துத்துவா தலைவர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். மற்றொரு இந்துத்துவா தலைவர் யோகி ஆதித்யாநாத் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக உள்ளார். எனவே, இந்து தேசம் என்ற நம்முடைய கனவானது நிறைவேற வேண்டும் என்றால் மோகன் பகவத் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என ராவத் கூறினார்.