மோகன்லால் கரம்சந்த் காந்தி.. பாவம் மோடியே குழம்பிட்டாரு!
டெல்லி: படத்தில் பரபரப்பான வசனங்களைப் பேசிப் பழக்கப்பட்ட விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தின்போது பலமுறை சறுக்கி விழுந்து எழுந்தார். இந்த வரிசையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் வாய் தவறி எதையோ சொல்லப் போக அதையே பரபரப்பாக்கி விட்டனர்.
பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பரபரப்பாக இயங்கி வரும் மோடி ஊர் ஊராகப் போய் பேசி வருகிறார்.
அப்படி ஒரு பேச்சின்போதுதான் வாய் தவறி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கூறுவதற்குப் பதில், மோகன்லால் என்று மலையாள நடிகரின் பெயரைச் சொல்லி சங்கடப்பட்டுப் போய் விட்டார்.
டுடு மொழியில் பேசப் போக...
ராஜஸ்தான் போயிருந்தபோது அங்கு டுடு மொழியில் பேசினார். அப்போதுதான் இந்தக் குழப்பம் நடந்து விட்டது.
அப்படி என்ன சொல்லிட்டார்....
நரேந்திர மோடி பேசுகையில், மகாத்மா காந்தியை புகழ்ந்து பேசினார். தனது பேச்சின்போது தனது வாழ்க்கையின் முடிவில் மகாத்மா காந்திக்கு ஒரு நிறைவேறாத ஆசை இருந்தது.
மோகன்லால்...அதாவது மோகன்தாஸ்
அந்த ஆசையை நீங்கள் நிறைவேற்றுவீர்களா. காந்தி ஆசையை நீங்கள் நிறைவேற்றுவீர்களா.. மோகன்லால் கரம்சந்த் காந்தியின் ஆசையை நிறைவேற்றுவீர்களா என்றார்.
அங்கதான் தப்பாயிப் போச்சு
மோகன்தாஸ் என்று கூறுவதற்குப் பதில் மலையாள நடிகரின் பெயரை சொல்லி விட்டார் மோடி. பின்னர் அதை அவரே சரி செய்து பேசி விட்டார்.
மலையாளப் படம் பார்த்திருப்பாரோ...
ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மோகன்லால் நடித்த படம் எதையாவது மோடி பார்த்திருப்பாரோ என்று எல்லோரும் நினைக்கும் அளவுக்கு லால் தாக்கத்தை தாஸிடம் காட்டியிருந்தார் மோடி.
அது சரி காந்தியின் கடைசி ஆசை என்ன தெரியுமா...
சுதந்திரம் பெற்றதும் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் காந்தி. அதைத்தான் இப்படி மறைமுகமாக கூறிப் பேசினார் மோடி.