வீரப்பமொய்லி மீண்டும் வெற்றி! முதல் முறையாக தோல்வி அடைந்த குமாரசாமி!!
பெங்களூர்: கர்நாடகத்தின் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் வீரப்பமொய்லி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை எந்த தேர்தலிலும் தோல்வி அடையாத குமாரசாமி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜனதா சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சே கவுடா உள்பட 18 பேர் போட்டியிட்டனர்.
இதில் வீரப்பமொய்லி 2-வது முறையாக சிக்பள்ளாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். அதேப் போல் இதுவரை சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தோல்வியே அடையாதவர் என்ற பெருமை பெற்ற குமாரசாமியும் இந்த தொகுதியில் போட்டியிட்டார்.
இதனால் இந்த தொகுதியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை சிக்பள்ளாப்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சிக்பள்ளாப்பூரில் உள்ள நாகர்ஜுனா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரப்பமொய்லி, குமாரசாமி ஆகியோர் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பின்னடைவில் இருந்தனர். எதிர்பார்க்காத வகையில் பா.ஜனதா வேட்பாளர் பச்சே கவுடா தொடக்க முதலே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார்.
இதனால் பா.ஜனதாவினர் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்று கொண்டாட்டத்திற்கும் தயாராகி வந்தனர். ஆனால் சிக்பள்ளாப்பூர் தொகுதியின் கடைசி 4 சுற்றுக்களின் முடிவு பா.ஜனதா வேட்பாளர் பச்சே கவுடாவை 2-வது இடத்திற்கு தள்ளிவிட்டது. அவர் 4,15,280 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வீரப்பமொய்லி 4,24,800 ஓட்டுகளை பெற்று வெற்றி மாலை சூடினார். ஏற்கனவே
இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரப்பமொய்லி தற்போது 2-வது முறையாக எம்.பி. ஆக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், இதுவரை எந்த தேர்தலிலும் தோல்வியே தழுவாத குமாரசாமி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 3,46,339 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.