வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார்.. மைசூர் சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
Recommended Video
மைசூர்: மைசூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக மைசூரைச் சேர்ந்த 41 வயது பெண் புகார் கொடுத்துள்ளார்.
தன்னைக் கடத்த முயன்றதாகவும், கொல்ல முயன்றதாகவும் அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து குவெம்பு நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமியாரின் செயலுக்கு தனது கணவரும் உடந்தை என்றும் அப்பெண் தனது புகாரில் பரபரப்புத் தகவலை தெரிவித்துள்ளார்.
மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் தங்கியுள்ளார் இந்த சாமியார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக இங்கு தங்கியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதி இந்த விரதம் முடிவடைகிறது. தினசரி இங்கு அவர் தனது பக்தர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு பெரும் பக்தர்கள் கூட்டம் உண்டு. நிதிப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவர் கில்லாடி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான் இச்சாமியார் மீது பலாத்கார புகார் கிளமபியுள்ளது. இவர் மீது புகார் கொடுத்த பெண் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும் எனது கணவருக்கும் இடையே திருமணமாகி 15 வருடமாகிறது. எனது கணவர் இந்த சாமியாரின் பக்தர் ஆவார். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். நீ போய்ப் பார் என்று கூறி வந்தார். ஆனால் நான் பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன்.
இந்த நிலையில் செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 1 மணி இருக்கும். கணவர் வீட்டில் இல்லை. அப்போது காலிங் பெல் ஒலித்தது. கணவர்தான் வந்து விட்டாரோ என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்தார். அவருடன் ஐந்து பேரும், கூடவே எனது கணவரும் நின்றிருந்தனர். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது அந்தரங்க உறுப்பிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசினார், திட்டினார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.
பிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். எனது உடையை தூக்கிப் போட்டு தீவைத்துக் கொளுத்தினார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். என்னைக் கொல்லவும் முயற்சித்தார்.
பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். என்னை அவரது கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறினார் என்று கூறியிருந்தார் அப்பெண்.
பல்வேறு வழக்குகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மைசூரை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது இந்த சம்பவம்.