தானேவில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த மதரஸா ஆசிரியருக்கு வலை
தானே: தானேவில் மதரஸா ஒன்றில் ஆசிரியரால் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் உள்ள மும்ரா பகுதியில் மதரஸா ஒன்றில் இம்மாதம் 12ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 4ம் வகுப்பு (9 வயது) மாணவி ஆவார்.
அரபிக் கற்றுக் கொள்வதற்காக மதரஸா சென்றுள்ளார் இச்சிறுமி. அப்போது அங்கு ஆசிரியரான நூருல்லா அன்சாரி என்பவர், சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி யாரிடமும் கூறவில்லை. ஆனால், மிரட்சியுடன் சிறுமி காணப்பட்டதைக் கண்டு, அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பின்னரே நடந்த சம்பவம் குறித்து அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்சாரி மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அதற்குள்ளாக அன்சாரி தலைமறைவாகி விட்டார்.
தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அன்சாரியையும் தேடி வருகின்றனர்.