ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு!
டெல்லி: ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்தபோது, 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால் மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஜிகித்சா ஹெல்த் கேர் என்ற நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடிந்தது. அந்நிறுவனத்துக்கே டெண்டர் அளிக்கப்பட்டது.
இதையடுத்து 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 35 மாவட்டங்களில் 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அந்நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு ரசீதுகளை சமர்ப்பித்ததாகவும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அத்தொகை அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது என்பதும் புகார்.
இந்த ஊழல் தொடர்பாக 2014ஆம் ஆண்டு முந்தைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் புகார் செய்யப்பட்டது. அவர் கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் ரசீது சமர்ப்பித்ததில் முறைகேடுகளையும், சேவையில் குறைபாட்டையும் கண்டுபிடித்தது. இதற்குள் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தானில் பதவிக்கு வந்தது.
ஜெய்ப்பூர் நகர மேயர் பங்கஜ் ஜோஷி அளித்த புகாரின்பேரில், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது ஜெய்ப்பூரில் உள்ள அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மாநில அரசு கடிதம் எழுதியது.
இதன்படி இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக அசோக் கெலாட் மீதும், ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம், அதன் டைரக்டர்களாக இருந்ததாக கருதப்படும் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் கிருஷ்ணா, மற்றொரு டைரக்டர் ஸ்வேதா மங்கள், அப்போதைய மாநில சுகாதார அமைச்சர் துரு மிர்சா ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த ஊழல் பணப் பரிமாற்றத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தற்போது அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.