பணம் எடுக்க முடியாத ஆத்திரம்... மணிப்பூரில் வங்கியை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள்
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் இம்பாலில் உள்ள ஸ்டேட் வங்கிக் கிளையை அடித்து நொறுக்கினர்.
இம்பால்: தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க வங்கி கிளையில் போதிய பணம் கையிருப்பு இல்லை என்ற காரணத்தால், வாடிக்கையாளர்கள் ஸ்டேட் வங்கி கிளையை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என பிரதமர் மோடி அறிவத்துள்ள நிலையில் வங்கிகளில் பெரும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் பணம் முழுவதுமாக வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை.
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. அந்த கிளையில் இன்று காலை வாடிக்கையாளர்கள் இருவர் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து, ஒருவாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவான ரூ.24 ஆயிரத்தை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லை; போதிய பணமுமில்லை என்று வங்கி ஊழியர்கள் கூறியதால் அங்கே கைகலப்பு ஏற்பட்டது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
இதே போல் மேற்கு இம்பாலில் உள்ள, லெமாக்ஹோங்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உருவான தகராறில் வங்கியின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.