லட்சுமி தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே மூத்த மாணவி.. ஆந்திர பள்ளியை கலக்கும் குரங்கு
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூரில் மாணவர்களோடு ஒரு குரங்கு தினமும் பள்ளிக்கு சென்று வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது வெங்கலம்பள்ளி என்ற கிராமம். இங்குள்ள அரசுப் பள்ளிக்கு மந்தி வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று கடந்த சில நாள்களாக தினசரி வருகிறது.
முதலில் குரங்கை கண்டு பயந்து போன மாணவர்கள் விரட்டினர். ஆனால் போக மறுத்ததோடு அங்கேயே சுற்றிவந்ததால் மாணவர்கள் பயத்தை மறந்து குரங்குடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தனர். அதற்கு லட்சுமி என்று பெயரிட்டு அழைத்து வரும் மாணவர்கள் அதோடு விளையாடி மகிழ்கிறார்கள்.
பள்ளியில் சீரியாஸாக மாணவர்கள் படிக்கும் போது தொந்தரவு செய்யாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கும் குரங்கு லட்சுமி.. மதிய உணவை மாணவர்களுடன் சாப்பிடுகிறது. லட்சுமி தான் பள்ளியிலேயே மூத்த மாணவியாம். அந்த அளவுக்கு வந்து செல்வதில் சின்சியராக இருக்கிறதாம். காலையில் பள்ளியில் பிரேயர் ஆரம்பிக்கும் போது வரும் லட்சுமி மாலையில் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது சமர்த்தாக காட்டுக்குள் சென்று விடுகிறது. இந்த நிகழ்வு தினசரி நடப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
அவ்வப்போத லட்சுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் மாணவர்களே, கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அந்த பள்ளியில் ஒரு மாணவனைப் போல் குரங்கு லட்சுமி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.