ரூ.2 லட்சம் பணப்பையை பறித்துச் சென்ற குரங்கு.. வலை வீசி தேடும் போலீஸ்!
பெண்ணிடம் இருந்து பணப்பையைத் திருடிச் சென்ற குரங்கைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்ற குரங்கைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 'நை மண்டி’ பகுதியைச் சேர்ந்த வியாபாரி விஜய் பன்சால். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், தனது மகள் நான்சியுடன் அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சென்றிருந்தார்.
தனது கடையை விரிவு படுத்துவதற்காக வங்கியில் இருந்து இரண்டு லட்ச ரூபாயை கடனாகப் பெற்ற பன்சால், அதனை ஒரு பையில் வைத்து தன் மகளிடம் கொடுத்தார். பின்னர் இருவரும் வங்கியில் இருந்து வெளியே வந்தனர்.
இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த, திடீரென சில குரங்குகள் அவரைச் சூழ்ந்து கொண்டன. அக்குரங்குகள் அவர்களைத் தாக்க முயற்சித்தன. அப்போது, அக்கூட்டத்தில் இருந்த குரங்கு ஒன்று, நான்சி கையில் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு ஓடியது.
இதனால், பன்சாலும், நான்சியும் அதிர்ச்சி அடைந்தனர். குரங்கை விரட்டியபடி பன்சால் சிறிது தூரம் ஓடினார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த வங்கி ஊழியர்கள் சிலரும், அந்த பகுதி மக்களும் அவர்களுக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால், பணப்பையை பறித்த குரங்கோ அருகில் இருந்த கட்டடத்தின் மாடிக்குத் தாவிச் சென்று அமர்ந்தது.
அங்கிருந்தபடி, பையைத் திறந்து பார்த்த குரங்கு, அதில் பணக்கட்டுகள் இருக்கவே தின்பண்டங்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தது. அதன் தொடர்ச்சியாக பையில் இருந்த சில ரூபாய் நோட்டுக் கட்டுகளை கிழித்து கீழே எறிந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பன்சால், நான்சி மற்றும் அங்கிருந்த மக்கள், பணப்பையை கீழே போட்டு விடும்படி குரங்கிடம் கெஞ்சினர். மக்களின் சத்தத்தால் பீதியடைந்த குரங்கு, பணப்பையைத் தூக்கிக் கொண்டு கட்டிடங்களைத் தாவிச் சென்று மறைந்தது.
இனி, குரங்கைப் பிடிப்பது சாத்தியமல்ல என உணர்ந்த பன்சால், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ, இந்த சம்பவம் தொடர்பாக எப்படி வழக்கு பதிவு செய்வது என குழம்பி போயுள்ளனர். குரங்கு தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்ளையடித்ததாகவோ அல்லது பணத்தை பறித்துச் சென்றதாகவோ வழக்கு பதிவு செய்ய முடியாது எனக் கூறினர்.
குரங்கு கீழே கிழித்துப் போட்ட பணத்தின் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, குரங்கு தூக்கிச் சென்ற பையில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மீதமிருந்திருக்கும் எனத் தெரிகிறது.
வங்கி வாசலில் வியாபாரி ஒருவரிடம் இருந்து குரங்கு பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.