தொழில் நுட்பத்தை சொல்லுங்க... இந்தியா கொடுத்த நெருக்கடியால் மான்சாண்டோ நாட்டை விட்டு ஓட்டம்
டெல்லி: மத்திய அரசுக்கும், மான்சாண்டோ நிறுவனத்திற்கும் மரபணு விதை தொடர்பான தொழில் நுட்பம் குறித்து கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் அடுத்த தலைமுறை மரபணு பருத்தி விதைக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை மான்சாண்டோ நிறுவனம் திரும்பப் பெற்றது.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மான்சாண்டோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, போல்கார்ட் 2 ரவுண்ட் அப் என்று சொல்லக் கூடிய அடுத்த தலைமுறை மரபணு பருத்தி விதையை இந்தியாவில் அறிமுகம் செய்ய அனுமதி கோரும் விண்ணப்பத்தை 2007ம் ஆண்டு இந்திய அரசிடம் அளித்திருந்தது. இது தொடர்பான பல்வேறு சோதனைகள் முடிவடைந்து அனுமதி கிடைப்பதற்கான சூழல் உருவாகி இருந்தது.
இந்நிலையில், மான்சாண்டோ நிறுவனத்தின் இந்தியாவின் தொழில் நுட்ப கூட்டாளியான மாஹிகோ நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், மான்சாண்டோ நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை இந்திய உள்நாட்டு விதை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கு மான்சாண்டோ நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பருத்தி விதைகளுக்கான விலை நிர்ணய விவகாரத்திலும் மத்திய அரசுக்கும் மான்சாண்டோவுக்கும் முரண்பாடுகள் ஏற்கனவே இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மான்சாண்டோ அடுத்த தலைமுறை பருத்தி விதைக்கான அனுமதி கோரும் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, மான்சாண்டோவின் செய்தித் தொடர்பாளர், வர்த்தகம் மற்றும் கட்டுப்பாட்டு நிலவரங்களில் இருந்து வரும் நிச்சயமின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் ஏற்கனவே இருக்கும் பருத்தி விதை வர்த்தகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், சரியான நேரத்தில் மீண்டும் அடுத்த தலைமுறை பருத்தி விதைக்கான அனுமதி கோரும் விண்ணப்பம் இந்திய அரசிடம் அளிக்கப்படும் என்று மாஹிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.