ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம்: டெல்லியில் பாஜக, எதிர்க்கட்சிகள் போட்டி போட்டு ஆலோசனை!
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்தின.
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக, ராம்நாத் கோவிந்தையும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மீரா குமாரையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் 4896 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற குளிர்கால மழைக்கால கூட்டத் தொடர் நாளை முதல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் செயல்படுவது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதேபோல காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தை நடத்தின. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார், துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
டோக்லாம் விவகாரம், பசுபாதுகாவலர்களின் கொடூர தாக்குதல்கள், டார்ஜிலிங் போராட்டம் உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.