தமிழகத்தில் இடியுடன் புழுதி காற்று.. கர்நாடகாவில் கன மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: கடலோரம், தெற்கு கர்நாடகா பகுதிகள், அசாம், மேகாலயாவில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமைக்கான வானிலை நிலவரம் பற்றி, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கனத்த அல்லது மிக கனத்த மழை, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் இன்று பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல அசாம், மேகாலயாவிலும், கேரளாவின் சில பகுதிகளிலும், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதி காற்று வீசக்கூடும். இதே நிலை, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவிலும் நீடிக்க கூடும்.
தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவு கடலோர பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.