சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்- பத்தினம் திட்டா ஆட்சியர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் ஹரிகிஷோர் சபரிமலை வந்தார். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "சபரிமலை வரும் பக்தர்களுக்கு எவ்வித சிரமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் தேவைக்காக கொண்டு வரப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் இடம், வெடிமருந்து வைக்கும் இடங்கள் ஆகியவற்றை விபத்து ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.
பக்தர்களின் வசதிக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை அரசு ஆயுர்வேத, ஹோமியோ அலோபதி மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
அலோபதி மருத்துவமனையில் தினமும் 1000 பேரும், சித்த மருத்துவமனையில் தினமும் 600க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் இந்த மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சபரிமலை பகுதியில் போதை, புகையிலை ப பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவற்றின் விற்பனையை கண்காணிக்க கலால் துரையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான இடங்களில் கலால் துறையினர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையை சுத்தமாக வைத்திருக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கண்டிப்பாக விலை பட்டியல் வைத்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விலை விவர பட்டியலில் போலீஸ் உள்பட அவசர தேவைக்காக டெலிபோன் எண்களை குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்தார்.