ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்... போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: இன்றைய பட்ஜெட்டில் போர் மற்றும் காவலர் நினைவிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. மோடி தலைமையிலான இந்த அரசின் முதல் மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
அதில், ராணுவ வீரர்களின் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் ரூ 100 கோடி செலவில் போர் நினைவிடமும், ரூ 50 கோடி செலவில் காவலர் நினைவிடமும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த் தியாகம்...
இது தொடர்பாக அருண் ஜெட்லி கூறுகையில், ‘நாட்டின் பெருமையை காக்க உயிர்த்தியாகம் உள்ளிட்ட பெரிய தியாகங்களை செய்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத படை வீரர்களுக்கு நாடு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
நினைவிடங்கள்...
அவர்களை நினைவு கூறும் விதமாகவும், கவுரவப் படுத்தும் விதமாகவும் டெல்லியில் உள்ள பிரின்சஸ் பார்க்கில் ரூ 100 கோடி செலவில் இந்த நினைவிடங்கள் அமைக்கப் படுகின்றன' என அவர் தெரிவித்தார்.
காவலர் நினைவிடம்...
அதனைத் தொடர்ந்து தேசிய அகாவலர்களுக்கான நினைவிடம் கட்டுவதற்கு என ரூ 50 கோடியை ஒதுக்கீடு செய்தார் அருண் ஜெட்லி. அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ராணுவ வீரர்களைப் போலவே போலீசாருக்கும் நாடு கடமைப்பட்டுள்ளது.
அஞ்சலி...
நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்யும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவிடம் கட்டப் படுவதாக அவர் தெரிவித்தார்.