"8"... அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத ஒரே நம்பர் இப்போதைக்கு இதுதான்!
டெல்லி: அரசியலில் எந்த நம்பர் பொசிஷனில் வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் எந்தப் பொசிஷனில் இருந்தாலும் அந்த அரசியல்வாதிகள் அறவே வெறுக்கும் எண்ணாக.. 8 உருவெடுத்துள்ளது. அதுதான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவாகும்.
இந்த சட்டம்தான் இன்று அடுத்தடுத்து பல முக்கியத் தலைவர்களை சிறைக்குள் தள்ளி வருகிறது. தேர்தலில் நிற்கவும் தடை விதித்து வருகிறது.
இந்த சட்டப் பிரிவுதான் ஜெயலலிதாவையும் இன்று ஜெயிலுக்குள் அனுப்பி வைத்துள்ளது. சாதா அரசியல்வாதி முதல் சூப்பர் ஸ்டார் அரசியல்வாதி வரை அத்தனை பேரும் நடுநடுங்க வைத்திருக்கும் இந்த சட்டத்தை ஷார்ப் செய்து சத்தாய்க்க வைத்த புண்ணியம் உச்சநீதிமன்றத்தையே சாரும்.
உட் பிரிவில் ஒரு உள் குத்து...!
உண்மையில் இந்த சட்டத்தின் 4வது பிரிவில் ஒரு உள்குத்து அம்சம் இருந்தது. அதாவது, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனே பதவி இழக்காமல் அவர்களை பாதுகாக்கும் விதத்தில் இந்த உட்பிரிவு அமைந்திருந்தது.
அப்பீல் செய்தால் போதும்...
அதாவது, இந்த பிரிவின்படி விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இழக்க மாட்டார்கள் என்று அந்த உட்பிரிவு கூறியது.
செம ஜாலியில் மக்கள் பிரதிநிதிகள்
சட்டத்தில் இருந்த இந்த மகா பெரிய ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை அனுபவித்து வந்தனர்.
ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்
இந்த நிலையில்தான் இந்தப் பிரிவு தொடர்பாக லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 10.7.2013 அன்று அதிரடியாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8-ன் உட் பிரிவு (4)-ஐ ரத்து செய்தது.
இவர்களுக்குத் தகுது கிடையாது
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனவர்கள், தேசிய கொடியை அவமதித்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மத வேற்றுமையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்துவது, போதை பொருள் கடத்தல் குற்றங்கள், தேர்தலின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச்சீட்டுகளை அள்ளி செல்லுதல் போன்ற குற்றங்கள், ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ல் அடங்கி உள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளதற்கு உயிர் கிடைத்தது.
இதுவரை எத்தனை பேர்
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்குப் பின்னர், ரஷீத் மசூத், லாலு பிரசாத் யாதவ், செல்வகணபதி தற்போது ஜெயலலிதா ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ இந்த சட்டம்....!