எவ்வளவு முடியுமோ சேற்றை வாரி இறையுங்கள்.. ஆனால் தாமரை மலர்ந்தே தீரும்.. பிரதமர் மோடி
எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது லோக்சபாவில் விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
இன்று அந்த உறுப்பினர்களின் உரைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நீண்ட நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி லோக்சபாவில் நீண்ட உரையாற்றி இருக்கிறார்.
இது முழுக்க முழுக்க காங்கிரசுக்கு எதிரான உரையாக இருந்தது. மேலும் யார் என்ன செய்தாலும் தாமரை கண்டிப்பாக மலர்ந்தே தீரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் மீது கோபம்
தொடக்கத்தில் இருந்தே அவர் காங்கிரசுக்கு எதிராகப் பேசினார். அதேபோல் நேருவின் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசினார். முக்கியமாக காங்கிரசின் ஆட்சி முறையை விமர்சித்தார். மிக முக்கியமாக காங்கிரசிற்கு ஜனநாயகம் பற்றி பேசத் தகுதியில்லை என்று குறிப்பிட்டார்.
குடும்பம்
மேலும் ''இந்தியாவை இவ்வளவு நாட்களாகக் ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வந்துள்ளது. எப்போதும் இந்தியாவை ஒரு குடும்பம் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் சிறிது அளவு ஜனநாயகம் கூட இல்லை'' என்றார்.
நாங்கள் சாமானியர்கள்
அதேபோல் ''நாங்கள் எல்லோரும் சாமானிய மக்கள். பாஜக கட்சியில் எல்லோரும் சாமானியமானவர்கள். நாங்கள் சாமானியர்களுக்காக ஆட்சி நடத்துகிறோம். எங்களை அதனால் ஆட்சியை விட்டு நீக்க நினைக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
|
எவ்வளவு முடியும்
முக்கியமாக ''எல்லோரும் எங்கள் மீது சேறு வாரி இறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் இதைத் தடுக்க மாட்டேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேறை வாரி இறையுங்கள். நீங்கள் என்ன செய்தாலும் தாமரை மலர்ந்தே தீரும். தாமரை மலர்வது உறுதி'' என்று பேசி இருக்கிறார்.