"ஆசார விதிமுறை மீறல்"... சபரிமலைக்குச் செல்ல முயற்சித்த 118 பெண்கள் பம்பையோடு தடுத்து நிறுத்தம்!
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆண் வேடமிட்டுச் சென்ற 14 வயது தமிழக சிறுமி உட்பட 118 பெண்களை பம்பையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆசார விதிமுறைகளின் படியும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் 10 வயது 50 வயது வரையுள்ள பெண்களுக்கு சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
இந்நிலையில், கடந்த சித்திரை மாத விஷூ தினத்தில் சபரிமலை மேல்சாந்தியின் 11 வயது மகள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்தது சர்ச்சையை உண்டாக்கியது. இதனால், சாமி தரிசனம் செய்ய வருபவர்களைப் போலீசார் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
குற்றச்சாட்டு...
கடந்தாண்டுகளை விட இந்தாண்டு ஆடி மாத பூஜைக்காக சபரிமலை செல்வோர் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பல சிறுமிகள் விதிமுறைகளை மீறி சாமி தரிசனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தீவிர சோதனை...
எனவே, போலீசார் மேலும் தங்களது கண்காணிப்பைத் தீவிரமாக்கினர். பம்பை கணபதி கோவில் அருகே உள்ள தேவ்சம் போர்டு அலுவலக பாதுகாவலர் அறையில் பெண் போலீசார் சந்தேகப் படுபவர்களை அழைத்து தீவிர சோதனை நடத்துகின்றனர்.
வயதுச் சான்றிதழ்...
பின்னர் புகைப்படத்துடன் கூடிய தகுந்த வயதுச் சான்றிதழ் கொண்டுள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் மட்டுமே தொடர்ந்து மலையேற அனுமதிக்கப் படுகின்றனர். இதன்காக பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை கூடுதல் போலீசார் தீவிர பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.
விதிமுறை மீறல்...
இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்கு உட்பட்ட 118 பெண்கள் விதிமுறைகளை மீறி சாமி தரிசனம் செய்ய முற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்க்ளைத் தொடர்ந்து மலையேற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக சிறுமி...
பிடிப்பட்ட பெண்களில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஒருவர். இவர் ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் போன்று மேல்சட்டை மற்றும் தலை முடியையும் வெட்டி இருந்ததால் மற்றவர்கள் கண்களுக்கு சிறுவன் போன்று காட்சியளித்துள்ளார்.