ரூபா மேடம் தான் வேண்டும்.. பரப்பன அக்ரஹார சிறையில் 200 கைதிகள் உண்ணாவிரதம்!
டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பரப்பன அக்ரஹார சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு: டிஜஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பரப்பன அக்ரஹார சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிகலாவுக்கு உதவிய சிறை கண்காணிப்பாளர் அனிதாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கைதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் டிஜஜி ரூபா. இவரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்தது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பெங்களூரு சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட கைதிகள் ரூபாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலை உணவை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறையில் சசிகலாவுக்கு உதவி செய்து வந்தது சிறை கண்காணிப்பாளர் அனிதாதான் என்று குற்றம்சாட்டிய கைதிகள் அனிதாவை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். கைதிகளின் இந்த போராட்டத்தால் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.