மோடி அமைச்சரவையில் தலித்துகளை விட பழங்குடியினருக்கே கூடுதல் பிரதிநிதித்துவம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் தலித்துகளை விட பழங்குடியினருக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபாவைப் பொறுத்தவரையில் மொத்தம் 47 பழங்குடி இன தொகுதிகள் உள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 26 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 2 தொகுதிகளையும் கைப்பற்றின.
அதே நேரத்தில் மொத்தம் உள்ள 87 தாழ்த்தப்பட்டோர் தொகுதிகளில் பாஜக மட்டுமே 40 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, லோக் ஜனசக்தி, தெலுங்கு தேசம் போன்ற கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
6 பழங்குடி இன அமைச்சர்கள்
மோடி அமைச்சரவையில் தற்போது 6 பழங்குடி இன அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கேபினட்டில் ஒன்று, இணை அமைச்சர்கள் 6
கேபினட் அமைச்சர் ஜூயல் ஓரம் ஒடிஷாவைச் சேர்ந்தவர். இவர் பழங்குடி இன நலத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். 10 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் ஒரு பழங்குடி இனத்தவருக்கும், இணை அமைச்சர்களில் 4 பழங்குடி இனத்தவருக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினத்தவருக்கு 13%
ஒட்டுமொத்தமாக பழங்குடி இனத்தவருக்கு 13% பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மன்மோகன்சிங் அரசில் 6% பிரதிநிதித்துவமே வழங்கப்பட்டிருந்தது. 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலித்துகள்..
23 கேபினட் அமைச்சர்களில் இருவர் தலித்துகள். தனிப்பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. 12 இணை அமைச்சர்களில் ஒருவர் தலித்.
உத்தரப்பிரதேச தலித்துகளுக்கு இடமில்லை
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 தலித் தொகுதிகளையும் பாஜக அள்ளியது. ஆனால் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இம்மாநிலத்தைச் சேர்ந்த சங்பிரியா கெளதம் முந்தைய வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர்.
7%
ஒட்டுமொத்தமாக மோடி அமைச்சரவையில் தலித்துகளுக்கு 7% பிரதிநிதித்துவமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15%-16% பேர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.