காஷ்மீர் : 35ஏ அரசியல் சட்டப் பிரிவை ரத்து செய்கிறது மத்திய அரசு... ராணுவ குவிப்பின் பின்னணி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சாசன பிரிவுகளில் ஒன்றான 35-ஏவை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதால்தான் அம்மாநிலத்தில் 10,000-க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் திடீரென 10,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டியிருப்பதால்தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவான 35ஏ- வை மத்திய அரசு ரத்து செய்யலாம்; அதன் விளைவாக வெடிக்கும் போராட்டங்களை ஒடுக்கவே ராணுவம் குவிக்கப்படுகிறது என்கின்றனர் அம்மாநில அரசியல் தலைவர்கள்.
குடிமக்கள் வரையறை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ அரசியல் சாசன பிரிவுகளை நீண்டகாலமாகவே ரத்து செய்ய வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம். அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவு என்பது ஜம்மு காஷ்மீரின் நிரந்த குடிமக்கள் யார் என்பதை வரையறைக்கிறது;
காஷ்மீர் தனித்தன்மை பாதுகாப்பு
மேலும் பிற மாநிலத்தவர் இங்கு சொத்துகளை வாங்க தடைவிதிப்பது உள்ளிட்ட காஷ்மீரின் தனித்தன்மையை பாதுகாக்கிறது. இந்த சட்டப் பிரிவை சுயநிர்ணய உரிமை கோரும் பிற மாநில இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
முஸ்லிம் பெரும்பான்மைக்கு செக்
இச்சட்டம் அமலில் இருப்பதால்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்களை பெரும்பான்மையின மக்களாக கொண்டதாக இருக்கிறது. இதை மாற்றும் வகையில்தான் தற்போது 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதான் எதிர்ப்புக்கு காரணம்
பாஜகவைப் பொறுத்தவரை 35 ஏ பிரிவு அமலில் இருப்பதால் ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை, தனியார் துறையினர் முதலீடு செய்ய முன்வருவதில்லை; தகுதியான மருத்துவர்கள் கிடைப்பது இல்லை; பிற மாநில குழந்தைகளுக்கு காஷ்மீரில் படிக்க அனுமதி கிடைக்கவில்லை என்கிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களோ தங்களது தேசிய இனத்தைப் பாதுகாக்கும் இந்த பிரிவை நீக்க கூடாது என்கின்றனர்.
போராட்டம் வெடிக்கும்?
தற்போது 35ஏ பிரிவு நீக்கப்பட்டால் ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரும் போராட்டம் வெடிக்கும் என்பதையும் மத்திய அரசு உணர்ந்தே அங்கு ராணுவத்தை பல்லாயிரக்கணக்கில் குவித்துள்ளது.