பிரீடம் 251... ரூ. 3600 கொடுத்து வாங்கி 251க்கு விற்பதா?... ஆட்காம் போடும் புது குண்டு!
டெல்லி: உலகிலேயே மிகவும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன் என்ற பெயரில் அறிமுகமான பிரீடம் 251 போனுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. தங்களுடைய போனை ரூ. 3600 கொடுத்து வாங்கி, அதனை ரூ. 251க்கு விற்பதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது ஆட்காம் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த மாதம், உலகிலேயே மிகக் குறைவான விலைக்கு, அதாவது ரூ. 251க்கு ஸ்மார்ட்போன் விற்கப் போவதாக அறிவித்தது.
இது தொடர்பாக தனியே இணையதளம் ஒன்றையும் அந்நிறுவனம் தொடங்கியது.
அலைபாய்ந்த மக்கள்...
மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் என்பதால், அதனை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஒரே நேரத்தில் அதிகமானோர் முன்பதிவு செய்ததால், அந்த இணையதளமே முடங்கியது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.
முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள்...
ஆனால் முன்பதிவு செய்தவர்களுக்கு 4 மாதங்களுக்குப் பின்னரே பிரீடம் 251 வழங்க முடியும் என ரிங்கிங் பெல்ஸ் அறிவித்தது. அதோடு, செல்போனை கையில் வாங்கும்போது பணம் செலுத்தினால் போதுமானது என முன்பதிவு செய்தவர்களின் பணத்தைத் திருப்பித் தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஏமாற்று வேலை...
இது ஒருபுறம் இருக்க, இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் விற்பது சாத்தியமல்ல, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் சர்ச்சைகள் வெடித்தன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீதும் பல சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டன.
கண்காணிப்பு...
அதன் தொடர்ச்சியாக அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை போன்றவை, இந்த நிறுவனத்தை கண்காணிப்பதாக அறிவித்துள்ளன.
ஆட்காமின் புகார்...
இந்நிலையில், பிரீடம் 251 போன், தங்களது குறிப்பிட்ட மாடலைப் போல் இருப்பதாக ஆட்காம் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
எங்களது போன் மாடல்...
இதுதொடர்பாக, ஆட்காம் என்றழைக்கப்படும், 'அட்வான்டேஜ் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சஞ்சீவ் பாட்டியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பதை போல, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கும் எங்களது மொபைலை 3,600 ரூபாய் விலையில் விற்பனை செய்துள்ளோம்.
சட்டப்படி நடவடிக்கை...
ஆனால், எங்களுடைய மொபைலை, 251 ரூபாய் மொபைல் என அந்நிறுவனம் விற்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்தால், அந்நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
எச்சரிக்கை...
மேலும், எங்களுடைய மொபைல் போல, அவர்களுடைய மொபைலை வடிவமைத்தாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.