கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் நீடிப்பு- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு போடும் அமலாக்க பிரிவு!
கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சட்டவிரோத பணப் பரவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
2007-2008-ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ சோதனை 8 மணி நேரமாக நடைபெற்றது. இது தொடர்பாக கார்த்தியிடம் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது.
சிபிஐயிடம் இருந்து எஃப்ஐஆர் நகல் கிடைத்தவுடன் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும். இதைத் தொடர்ந்து அவரது சொத்துகள் முடக்கப்படும்.
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் ஆகியவற்றில் அன்னிய செலாவணி முறைகேடு செய்ததாக கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.