அமலாக்கத்துறை அறிக்கையால் கார்த்தி-ப.சிதம்பரத்திற்கு வலுக்கும் சிக்கல்
மும்பை: சிபிஐ காவலில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் வலுக்கிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கோர அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெற ஐ.என்.எக்ஸ். மீடியாவிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை அமலாக்கத்துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
அறிக்கையின் அடிப்படையில் கார்த்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அமலாக்கத்துறை அறிக்கையால் கார்த்தி மட்டும் அல்ல அவரின் தந்தைக்கும் சிக்கல் ஏற்படக்கூடும்.
அறிக்கை தொடர்பாக அமலாக்கத்துறையும் விரைவில் கார்த்தியிடம் விசாரணை நடத்த உள்ளது. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அன்னிய முதலீடு பெற கிளியரன்ஸ் வழங்கிய மேலும் நான்கு வழக்குகள் குறித்த விபரங்களை அமலாக்கத்துறை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்துள்ளது.