சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை.. வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள்
குறைந்த ஊதியம் கிடைத்தாலும் பரவாயில்லை என வீட்டிலிருந்து பணியாற்றும் பணிகளையே பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
டெல்லி: குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை பேலன்ஸ் செய்ய வீட்டிலிருந்து பணியாற்றும் பணிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தற்போது வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கல்வி உள்ளிட்டவைக்காக கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் சேர்ந்து சம்பாதித்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற காலம் உருவாகி விட்டது.
இதனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்ற சூழல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டுக் குடும்பங்கள் கானல் நீராகி வருகிறது. கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தாக வேண்டியது அதிகமாகி வருகிறது.
கிரீச்சுகள் அதிகரிப்பு
வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை பார்த்து கொள்ள குழந்தைகள் காப்பம், குழந்தைகள் விளையாட்டு மையம் என்று தெருவுக்குத் தெருரு முளைத்துவிட்டன. வேலைக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து அவர்களை கிரீச்சில் விட்டுவிட்டால் போதும். அவர்கள் கவனித்து கொள்வார்கள். நல்ல கவனிப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
கணவருக்கு கை கொடுக்க...
வேலைக்கு செல்லும் பெண்கள் அதில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் குடும்பத்தை தூக்கி பிடிக்கவும், கணவனுக்கு கை கொடுக்கவும் பார்க்கும் வேலையை விட மனம் வருவதில்லை. இதனால் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு துணை நிற்க விரும்புகின்றனர்.
சர்வே
அன்னையர் தினத்தை முன்னிட்டு டெல்லி, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த கர்சே நவுக்கரி என்ற வேலை வாய்ப்பு இணையதளமும், அசோசேம் எனப்படும் இந்திய வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தின. அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
35-45 பெண்கள் விருப்பம்
35 வயது முதல் 45 வயதிலான பெண்கள் பெரும்பாலும் விரும்புவது வீட்டிலிருந்து பணியாற்றும் வேலைகள்தான். உடல் நிலை, குழந்தையை கவனிக்க வேண்டிய நிலை போன்ற காரணத்தால் பெண்கள் இவற்றையே விரும்புகின்றனர்.
டெல்லி முதலிடம்
இதில் டெல்லி பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்த இடத்தில் கர்நாடகா, மும்பை பெண்கள் உள்ளனர். டெல்லியில் 20 சதவீத பெண்களும், கர்நாடகத்தில் 12 சதவீத பெண்களும், மும்பையில் 10 சதவீத பெண்களும் ஒர்க் பிரம் ஹோம் வாய்ப்புகளை விரும்புகின்றனர்.