சியாச்சின் பனிச் சிகரத்தில் புதைந்து போன போர்ட்டரின் உடல் 5 நாட்களுக்குப் பின் மீட்பு
டெல்லி: சியாச்சின் பனி மலையில் 200 அடி ஆழ இடைவெளியில் விழுந்து புதைந்து போன சுமை தூக்கும் தொழிலாளியின் உடலை 5 நாள் தேடுதலுக்குப் பின் ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி சியாச்சின் பனிமலைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக பனிமலை இடைவெளியில் துக்ஜெய் கியாஸ்கெட் என்ற 40 வயது சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் விழுந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர், சிறப்பு ராணுவக் குழுவினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உறைபனியை வெட்டி எடுத்து, சுமார் 130 அடி ஆழத்தில் துக்ஜெயின் உடலை அவர்கள் கண்டறிந்தனர்.
பின்னர், உடல் மேலும் ஆழமான பகுதிக்கு சென்று விடாதபடி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் பாதுகாப்பாக நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது.
உயிரிழந்த துக்ஜெய், ராணுவ வீரர்களுக்கு உதவிகரமாக இருந்தவர். இது தொடர்பாக ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் கூறுகையில், ‘அதிக சித்ரவதை நிறைந்த மற்றும் கொடிய சூழல் கொண்ட சியாச்சின் பனிமலை பகுதியில் ராணுவத்துடன் இணைந்து குடிமகன் ஒருவர் பணியாற்றுவதற்கு அதிக தைரியம், உடல் தகுதி மற்றும் திட மனநிலை ஆகியவை வேண்டும் என்னளவில், துக்ஜெய் எங்களில் ஒருவர்'எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி, 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களையும் சேர்ந்து இந்தாண்டு மட்டும் இதுவரை 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.