இதுதான் தூய்மை இந்தியாவாஜி.. உலகின் அசுத்தமான நகரங்களில் முன்னிலை வகிக்கும் வட இந்தியா!
உலகில் இருக்கும் மிகவும் அசுத்தமான 20 நகரங்களில் வடஇந்திய நகரங்கள் அதிக இடம்பிடித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: உலகில் இருக்கும் மிகவும் அசுத்தமான 20 நகரங்களில் வடஇந்திய நகரங்கள் அதிக இடம்பிடித்து இருக்கிறது. மிகவும் மாசு படிந்து மக்கள் வசிக்க கஷ்டப்படும் இடங்கள் என்று இந்த பகுதிகளை உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலகில் உள்ள மொத்தம் 4,300 நகரங்களை உலக சுகாதார அமைப்பு சோதனை நடத்தியது. இதில் ஆசியாவை சேர்ந்த நாடுகள்தான் அதிக அசுத்தம் கொண்ட அதிக மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
அதிலும் முக்கியமாக முதல் 20 இடங்களில் 14 இடங்களை இந்தியா பெற்று இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் 4 வருடமாக தூங்கிக் கொண்டு இருந்ததை உலக சுகாதார அமைப்பு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
முதல் இடம் யாருக்கு
இதில் முதல் இடம், எல்லோரும் யூகித்தது போல, உத்தர பிரதேச மாநிலத்திற்குத்தான். உலகிலேயே உத்தர பிரதேசத்தில் உள்ள, கான்பூர்தான் அதிக மாசுக்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் இடம்பிடித்துள்ளது, அதற்கு அடுத்தபடியாக குஜராத்தின் அஹமதாபாத் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியா
இதற்கு அடுத்தபடியாக நிறைய வடஇந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளது. பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, லக்னோ, ஆக்ரா, முசாபர்நகர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பட்டியாலா, ஜோத்புர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இதில் அதிக பகுதிகள் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் கணக்கு படி உலகிலேயே மோசமான நகரங்கள் இவைதான் .
டெல்லியின் கதை
எப்போதும் மோசமாக இருக்கும் டெல்லி கொஞ்சம் முன்னேறியுள்ளது. 2015ல் அதிக மாசு கொண்டு நகரத்தின் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த டெல்லி இப்போது 6 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஆனாலும் இங்கு இருக்கும் காற்று மக்கள் சுவாசிக்க கூடியதை விட 10 மடங்கு மோசமாக இருக்கிறது. ஆனால் இங்கு இருப்பதை விட உத்தர பிரதேச மாநிலத்தில்தான் காற்று அதிக மாசுடன் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது.
உண்மையான தூய்மை இந்தியா
இதில் முதல் ஐம்பது நகரங்களில் பட்டியலில் எங்குமே தென்னிந்திய நகரம் இடம்பெறவில்லை. தென்னிந்தியாவில் கோவாவையும் சேர்த்து இருக்கும் 6 மாநிலங்களில் எதிலும் காற்று மாசுபாடு காணப்படவில்லை. அதேபோல் அசுத்தமான நகரம் என்ற பெயரையும் பெறவில்லை. இந்த 6ல் 5 மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆட்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீதம் இருக்கும் நகரங்கள் உண்மையான தூய்மை இந்தியாவை இங்கிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் போல.