'ஸ்வச் பாரத்' இருக்கட்டும்.. இதுதான் நம்ம மிச்ச பாரத்!
பெங்களூர்: 'ஸ்வச் பாரத்' என்று அழைக்கப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அரசு தொடங்கி வைத்துள்ளது. குப்பையை குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்திட்ட நோக்கம்.
நாடு சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டு கடந்த பிறகும், சாலையில் காறி உமிழ்வது, வாகனத்தில் சென்றபடியே குப்பையை ரோட்டில் வீசுவது போன்ற ஒழுங்கீனங்களில் நமது மக்கள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
விவேக் ஒரு திரைப்படத்தில் கூறுவதை போல, "துப்பி, துப்பியே இந்த கன்ட்ரிய வியாதி கன்ட்ரியா.." மாற்றி வைத்துள்ளனர் திருவாளர் பொது ஜனங்கள்.
அவசரம், வேறு வழியில்லை என்று, இந்த செயல்களில் ஈடுபடுவோரைவிட, இச்செயல் அசிங்கமானது என்பதை கூட உணராமல் அதை செய்வோர் அதிகம். தூய்மை இந்தியா பிரச்சாரத்தால், அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டோரில் ஒரு சிலருக்காவது, தாம் செய்வது தவறு என்ற எண்ணம் வர தொடங்கியுள்ளது.
ஆனால், குப்பையை கொட்ட போதிய குப்பை தொட்டி வசதி செய்துகொடுக்காத நாட்டில், பிரச்சாரம் மட்டுமே மாற்றத்தை கொண்டுவந்துவிடாது என்று ஒரு எதிர்பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருப்பினும், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதே உண்மை. குப்பை தொட்டி இருக்கும் இடம் தேடிபிடித்து குப்பையை கொட்ட மனது இருந்தால் போதுமானது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
பெங்களூர், பொம்மனஹள்ளியின், பேகூர் மெயின் ரோட்டில் நமது செய்தியாளரால் எடுக்கப்பட்ட இந்த படத்தை பாருங்கள். முக்கிய சாலையின் அருகே இவ்வளவு பெரிய குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தும்கூட, அதன் உள்ளே போடப்பட்ட குப்பைகளைவிட, வெளியே கிடந்த குப்பைகள்தான் அதிகம்.
காற்றில் பறந்துவந்து கீழே விழுந்துவிட்டது என்று காரணம் சொல்ல முடியாது. ஏனெனில், குப்பை தொட்டியின், கீழே கிடந்த குப்பைகள் பாலத்தீன் கவரால் கட்டப்பட்ட நன்கு வெயிட்டான குப்பைகள். குப்பை தொட்டியே இருந்தாலும், அதற்குள் போடாமல் பக்கத்தில்தான் வீசிச்செல்வோம் என்பதுதான் மிச்ச, சொச்ச இந்தியாவின் மைண்ட் செட். இதற்கு, நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரில் எடுக்கப்பட்ட இந்த படமே சாட்சி.