நகம், நட்டு போல்டுகளை பாலில் கலந்து 2 குழந்தைகளைக் கொன்ற தாய்... கணவரின் சந்தேகத்தால் விபரீதம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கணவரின் சந்தேகத்தால் பெற்றக் குழந்தைகளையே கொடூரமாகக் கொலை செய்த தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தான் பெற்ற மகள்கள் என்று கூட பார்க்காமல் பால் புட்டியில் கூரிய நகங்களை கொண்டும் நட்டு போல்டுகளையும் அரைத்து அதில் கலந்து இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார் அந்தப் பெண்.
ஜெய்பூரில் வசித்து வருபவர் அருண். கடந்த 2009ம் ஆண்டு தனது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்த அருண், இரண்டாவதாக ரத்னா என்பவரை மணந்தார். இத்தம்பதியினருக்கு சோனியா (3) சமிரிதி (7 மாதம்) என இரு மகள்கள்.
இந்நிலையில், சமீபகாலமாக ரத்னாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவருடன் அருண் சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்துப் போன ரத்னா, கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் தனது இரு மகள்களையும் கோடூரமாகக் கொலை செய்தார்.
பின்னர் உடல்களை பாலீதின் கவரில் கட்டி, மூன்று தினங்கள் அவற்றுடனேயே வாழ்ந்துள்ளார். மூன்று தினங்களுக்குப் பின் அவற்றை அருகில் உள்ள நீர் இல்லாத கிணற்றில் வீசியுள்ளார். இதன் மூலம் அக்குழந்தைகள் கொலை செய்யப்பட்டது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்னாவைக் கைது செய்தனர். போலீசாரிடன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் ரத்னா. தன் நடத்தையின் மீது கணவர் சந்தேகம் கொண்டு சண்டையிட்டதால், இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அக்குழந்தைகளின் வயிற்றில் நகம் மற்றும் போல்ட் நட்டின் துண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றை அரைத்து பாலில் கலந்து கொடுத்து குழந்தைகளை ரத்னா கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ரத்னாவின் மனநிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.