அப்பாவுடன் வாழ ஆசைப்பட்ட மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அம்மா
மும்பை: விவாகரத்து மூலம் பிரிந்து வாழும் கணவர் மீதிருந்த கோபத்தால், தந்தையுடன் சேர்ந்து வாழ விரும்பிய மகனை கிரிக்கெட் மட்டையால் தாயே அடித்துக் கொன்ற சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே நகரின் விஷ்ரண்ட்வாடி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு 13 வயதில் சைதன்யா என்ற மகன் உண்டு.
திடீரென விவாகரத்து மூலம் பெற்றோர் பிரிந்ததால், மனம் வாடிய சைதன்யா தந்தையுடன் வாழ ஆசைப்பட்டுள்ளான். ஆனால், அதற்கு அவனது அம்மா சம்மதிக்கவில்லை. சைதன்யா தன்னுடன் தான் வளர வேண்டும் என விரும்பியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே இருவருக்குள்ளும் பிரச்சினை இருந்துள்ளது.
மகனை அன்பாகவும், பின்னர் மிரட்டியும் தன்னுடன் வாழுமாறு கூறியுள்ளார் அத்தாய். ஆனால், அச்சிறுவன் எப்போதும் தந்தையின் நினைவுடனேயே இருந்ததாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் சைதன்யாவைக் கண்மூடித் தனமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சைதன்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சைதன்யாவின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.