பத்தாம் வகுப்பு தேர்வை மகளுடன் எழுதி தேர்ச்சி அடைந்த 43 வயது பெண்
மும்பை: மும்பையை சேர்ந்த 43 வயது பெண்ணும், அவரது மகளும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் சரிதா ஜகதே(43). அவரது மகள் ஸ்ருதிகா(16). குடும்ப சூழலால் 4ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சரிதா தனது மகளுடன் சேர்ந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்.
தேர்வில் தாயும், மகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சரிதா 44 சதவீத மதிப்பெண்களும், ஸ்ருதிகா 69 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இது குறித்து சரிதா கூறுகையில்,
நான் 4ம் வகுப்பு படிக்கையில் எனது தந்தை இறந்துவிட்டார். நாங்கள் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். குடும்ப சூழலால் நாங்கள் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றோம். படிப்பை நிறுத்தி 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் படிப்பை தொடருமாறு என் கணவர் வலியுறுத்தினார்.
அதன் பிறகே நான் படிப்பைத் தொடர்ந்தேன். தேர்வில் தேர்ச்சி அடைந்ததில் மகிழ்ச்சி. என் மூத்த மகள் ஷிதிஜா இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதி 48 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்றார்.