உ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்!
உ.பியில் ஓடும் ரயிலில் 15 ஆண்கள் பலாத்காரம் செய்ய முயற்சித்ததால், ரயிலிலிருந்து குதித்து தாயும், மகளும் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற 15 ஆண்களிடம் இருந்து தப்ப தாயும், மகளும் ரயிலில் இருந்து குதித்தனர்.
தாயும் (40), மகளும் (15) கொல்கத்தாவிலிருந்து டெல்லி செல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது ரயில் சந்தாரி- கான்பூர் ரயில் நிலையத்துக்கு இடையில் சென்றது.
இதையடுத்து கழிப்பறை சென்ற சிறுமியை அங்கிருந்த நபர் ஒருவர் கையை பிடித்து இழுத்துள்ளார். இதை தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியாததால் தாய், தனது மகளுடன் ரயிலில் இருந்து குதித்து விட்டார்.
நடந்தே சந்தாரி ரயில்நிலையத்துக்கு...
இதனால் விழுந்த அதிர்ச்சியில் இருவருக்கும் 2 மணி நேரமாக சுயநினைவில்லாமல் கிடந்துள்ளனர். இதையடுத்து மயக்கம் தெளிந்தவுடன் அங்கிருந்து மெதுவாக நடந்து சந்தாரி ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்த மக்களிடம் நடந்தவற்றை கூறினர்.
மக்கள் உதவி
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரும் லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு ரயில்வே போஸீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வழக்கு பதிவு
அப்போது அந்த தாய் போலீஸ் விசாரணையில் கூறுகையில், நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எனது மகள் 9-ஆம் வகுப்பு படிக்கிறாள். நாங்கள் ஏறிய பெட்டியில் இருந்த 10 முதல் 15 ஆண்கள் ஹௌராவில் ரயில் புறப்பட்ட போதிலிருந்தே எனது மகளை கிண்டல் செய்தனர். எனது மகளின் கையை பிடித்து அவர்கள் இழுத்தவுடன் அலகாபாத் ரயில் நிலையத்தில் நான் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம் இரு முறை புகார் கொடுத்தேன்.
அரை மணி நேரத்தில்....
அங்கிருந்த போலீஸார் என்னுடன் வந்து அந்த கும்பலில் இருந்த 3 பேரை அடித்து இழுத்து சென்றனர். இதையடுத்து அந்த 3 பேரும் போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு அரை மணிநேரத்தில் மீண்டும் வந்தனர். அலகாபாத்தை விட்டு ரயில் நகர்ந்ததும் அந்த நபர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை.
மகளை இழுத்தனர்
இதையடுத்து எனது மகளை எங்காவது விற்று விடுவதாக என்னை மிரட்டினர். பின்னர் இரவு 10 மணிக்கு எனது மகள் கழிப்பறைக்கு சென்ற போது அவரின் கையை பிடித்து இழுத்தனர். மகளின் சப்தம் கேட்டு ஓடி சென்று அவர்களிடம் போராடினேன். இந்த போராட்டத்தில் எனது மகளின் துணியை கிழித்துவிட்டனர். இதன் பிறகு வேறு வழியில்லாமல் ரயிலில் இருந்து குதித்து விட்டோம் என்றார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.