வீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக வசித்த தாய், மகள் மீட்பு
டெல்லியில் 4 வருடமாக பூட்டிய வீட்டில் வசித்து வந்த தாய், மற்றும் மகளை காவல்துறையினர் மீடடு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
டெல்லி: டெல்லியில் வீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக உள்ளே வாழ்ந்து வந்த தாய், மகளை போலீசார் மீட்டனர்.
டெல்லி மஹாவீர் எல்கலேவ் பகுதியில் வீடு ஒன்றில் 2 பெண்கள் மிக நீண்ட நாட்களாக வீட்டை பூட்டிகொண்டு உள்ளே இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், முதல் மாடியில் உள்ளே பூட்டப்பட்டிருந்த அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கலாவதி என்ற 42 வயது பெண்ணும், 20 வயதான அவரது மகள் தீபாவும் இருந்தனர்.
இதையடுத்து, கீழ் வீட்டில் வசித்த கலாவதியின் மாமனார் மஹாவீர் மிஸ்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் இருவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதில் மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் மற்றும் பேத்தி ஆகிய இருவரும் அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக தெரிவித்தார்.
இருவரும் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே உணவு கேட்பதாகவும், மற்ற நேரங்களில் அறையை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தாய், மகள் இருவரையும் மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.