சண்டை போட்டுக்கொண்டது ஒரு குற்றமா.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்.. மும்பையில் சோகம்
மும்பை: மும்பையில் சண்டைப் போட்டுக் கொண்ட குழந்தைகளை தாயே விஷம் கொடுத்த கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிகிச்சைப் பெற்று வரும் தாய் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.
மும்பை கலாசோவ்கி பகுதியில் வசித்து வந்தவர் சுஷ்மா. இவருக்கு தனுஜா என்ற பெண் குழந்தையும் அனுஜ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். 38 வயதான சுஷ்மா கணவர் இன்றி 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளனர். அவர்களின் தாய் எத்தனையோ முறை கூறியும் கேட்கமால் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
சண்டை போட்டுக்கொண்ட குழந்தைகள்
தேர்வுகள் நெருங்குவதாக கூறிய சுஷ்மா இருவரையும் வீட்டில் அமர்ந்து படிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை காதிலேயே வாங்காமல் மீண்டும் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்கு விஷம்
ஒருக்கட்டத்தில் அவர்களின் சண்டையை பார்த்து விரக்தியடைந்த சுஷ்மா இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குழந்தைகள் பலியான பரிதாபம்
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக கெம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் 4 நாள் சிகிச்சைக்குப் பிறகு அந்த 2 குழந்தைகளும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.
ஆபத்துக் கட்டத்தை தாண்டிய தாய்
சுஷ்மா ஆபத்துக் கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி நடந்துள்ளது.
கைது செய்ய காத்திருக்கும் காவல்துறை
தற்போது வரை சுஷ்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் கைது செய்யப்படுவார் என போலீசர் தெரிவித்துள்ளனர்.