இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முயன்றார் அன்னை தெரசா... பாஜக எம்.பி பரபர பேச்சு!
லக்னோ: இந்திய நாட்டை கிறிஸ்தவமயமாக்கும் முயற்சியில் அன்னை தெரசா, ஈடுபட்டார், அதன் விளைவாகவே இன்று வட கிழக்கு மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை அதிகரித்துள்ளது என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி எம்.பியான ஆதித்யநாத் சர்ச்சை பேச்சுக்கு புகழ் பெற்றவர். நேற்று அம்மாநிலத்தின் பாஸ்தி நகரில் நடைபெற்ற ராமர் கதை, நிகழ்ச்சியில் உரையாற்றியபோதும் அவரது அதிரடி பேச்சு வெளிப்பட்டது.
யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அன்னை தெரசா இந்தியாவை கிறிஸ்தவமயமாக்க தீவிர முயற்சி செய்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்து அவர் செய்த செயல்கள் இப்போது வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ மதமாற்றத்தை அதிகரித்துள்ளது.
வாடும் வடகிழக்கு
கிறிஸ்தவ மதமாற்றம் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் அதுவும் குறிப்பாக, நாகாலந்து, மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பிரிவினை குரல்கள் அதிகரித்துள்ளன.
விரட்டப்படும் இந்துக்கள்
உத்தரபிரதேசத்தின் கைரனா பிரதேசத்தில் இருந்து இந்துக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி உயிருக்கு அஞ்சி வேறு இடங்களுக்கு ஓடுகிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என எல்லா இடங்களிலும் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள்.
மதசார்பின்மையா?
இந்துக்கள் விரட்டப்படும்போது, மதசார்பின்மை பேசுவோர்கள் வாய் திறக்க மாட்டார்கள். கைரானா பகுதியில் இந்துக்கள் இந்த நிலைக்கு வருவதற்கு காரணம், இந்த போலி மதசார்பின்மைவாதிகள்தான். இதனால்தான் கைரானாவில் 68 சதவீதமாக இருந்த இந்துக்கள் மக்கள் தொகை 8 சதவீதமாக குறைந்துள்ளது.
தடுக்கவே முடியாது
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. பாபர் மசூதியை இடித்தபோதே தடுக்க முடியாதவர்களா, ராமர் கோயில் கட்டுவதை தடுத்துவிடுவார்கள்? இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
பழைய குற்றச்சாட்டு
அன்னை தெரசா, ஏழைகளுக்கு உதவுவதாக கூறி, அவர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியதாக, கடந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் குற்றம்சாட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.