இனி குழந்தைகளை தத்துக் கொடுக்கப் போவதில்லை: அன்னை தெரசா மிஷினரி திடீர் முடிவு!
கொல்கத்தா: இந்தியாவின் மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து குழந்தைகள் தத்து கொடுக்கும் திட்டத்தை கைவிட்டதாக அன்னை தெரசா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு இயக்கமான "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" அறிவித்துள்ளது.
கொல்கத்தா நகரை மையமாக கொண்டு நாடு முழுவதிலும் சுமார் 65 ஆண்டுகளாக சமூகத் தொண்டில் ஈடுபட்டுவரும் இந்த இயக்கம் அனாதையாக கைவிடப்படும் குழந்தைகளை தத்தெடுத்து குழந்தைகள் இல்லாதவர்களுக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தத்து கொடுத்து வந்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 19 குழந்தைகள் காப்பகத்தை இந்த இயக்கம் நடத்தி வருகின்றது.
ஆனால், சமீபத்தில் மத்திய அரசு குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தில் சில புதிய விதிமுறைகளை இணைத்தது. அனைத்து தத்தெடுப்பு விவகாரங்களும் இதற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள குழுவின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். ஒரே குழந்தையை காட்டி தத்து கொடுப்பதைவிட நான்கைந்து குழந்தைகளை காண்பித்து அதில் ஒன்றை தத்து எடுக்கும் தேர்வு முறை அறிமுகப்படுத்த வேண்டும்.
தனிநபருக்கும் உரிமை உண்டு:
தம்பதியராக இல்லாமல் தனிநபராக வரும் ஆண், பெண் இருவருக்கும் தத்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானமாக இருக்கு நிர்வாகம்:
தம்பதியாக வாழாமல் தனியாக வாழும் ஆண், பெண் மற்றும் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கு குழந்தைகளை தத்து அளிப்பது இல்லை என்பதில் "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" ஆரம்பத்தில் இருந்தே தீர்மானமாக உள்ளது.
தத்துக் கொடுக்கப் போவதில்லை:
இந்நிலையில், இந்த இயக்கத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த தத்தெடுப்பு சட்டம் தொடர்பான விதிமுறைகளுடன் ஒத்துப்போகும் வாய்ப்பு இல்லை என்பதால் இனி குழந்தைகளை தத்து கொடுக்கும் சேவையில் இருந்து விலகி இருக்கப்போவதாக "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" அறிவித்துள்ளது.
நிர்வாகிகள் மறுப்பு:
சமீபத்தில் பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வசிக்கும் தம்பதியரல்லாத சிலர் "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" காப்பகத்தில் இருந்து குழந்தையை தத்து எடுக்க சென்றபோது, அதன் நிர்வாகிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
வணிகப் பொருள் இல்லை:
இந்த திடீர் முடிவு குறித்து இந்த இயக்கத்தை சேர்ந்த மிக மூத்த சகோதரிகளில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து அதில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று கூறுவது, குழந்தை இல்லாதவர்களுக்கு அவற்றை அன்பளிப்பாக தருவதாக அமையாது. மாறாக, குழந்தைகளை வணிகப்பொருளாக மாற்றுவதாக அமைந்துவிடும்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
13 குழந்தைகள் காப்பகங்கள்:
இதற்கிடையில், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு கட்டுப்படாததால் இந்த தொண்டு இயக்கத்திற்கு சொந்தமாக 13 குழந்தைகள் காப்பகங்களை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.